Thursday 12 January 2012

27. Some more prize objects are claimed for their own count.

வியாழன் ஜனவரி,12, 2012

மார்கழி 27, கர வருடம்

திருப்பாவை - பாடல் - 27

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.

விளக்கம்: கூடாரை வெல்லும் சீர்கோவிந்தன் என்று ஆண்டாள் கண்ணனை போற்றுகிறாள். பகைவர்களை வெல்லும் பெருமை மிக்கவன் அவன். கோயில்களில் இன்று கூடாரவல்லி விழா நடைபெறும். அக்கார அடிசில் என்னும் உணவு படைப்பர். நெய்யில் தயாரிக்கப்படும் இது இனிய சுவை கொண்டது. கிருஷ்ண தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் பெண்கள் பாடும் பாடலாகும்.

The unconjunctive Thou conquer, Oh!
Govinda glorious ! Praying Thee we acquire our desire;
Shall we spell out the prize we aspire?
Fabulous gift praiseworthy by the country;
Bracelet, shoulder-ring, ear-stud, floral, anklet,
And several such we enjewel our body entire,
Would enrobe and follow through
Cooked milk-rice delicious,
Steeped in ghee poured off copious
Which flow down the elbow, Thou amorous!
Entranced would remain conjunct, consider our damsel.

திருப்பள்ளியெழுச்சி - பாடல் - 7


அது பழச்சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்
மதுவளர்பொழில் திருவுத்தரகோச
மங்கை உள்ளாய் திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!


பொருள்: தேன்சிந்தும் மலர்களையுடைய சோலைகளைக் கொண்ட உத்தரகோசமங்கை தலத்தில் எழுந்தருளிய சிவனே! திருப்பெருந்துறையில் வசிக்கும் தலைவனே! உன் பெயர் சொன்னால் அது பழம் போல் இனிக்கிறது. பால் போல் சுவையாக இருக்கிறது. உன்னை எளிதாக அடைந்து விடலாம் எனச் சொல்கிறார்களே தவிர, தேவர்களால் கூட அதைச் செய்ய முடியாது. ""உன்னுடைய வடிவம் என்ன? இவன் தான் அவனோ?' என்று அனுமானிக்கத் திணறும் தேவர்களுக்கே காட்சி தராத நீ, ""இதோ, என் உண்மையான வடிவம் இதுவே' எனச் சொல்லி, எங்கள் முன்னால் இருக்கிறாய். எங்களை நீ என்ன செய்ய நினைக்கிறாயோ, அதைச் செய் என்றே கேட்கிறோம். எம்பெருமானே! நீ எழுந்தருள்வாயாக.
விளக்கம்: "எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம்' என்ற பாடல் வரி மாணிக்கவாசகரின் உள்ளத்தை நமக்கு வெளிப்படுத்து கிறது. " இறைவா! நீ என்ன நினைக்கிறோயோ அதைச் செய்வாயாக!' என்று சிவனைக் கேட்கிறார். பக்தி முதிர்ந்த நிலையில் இருக்கும் பக்தனின் நிலை இது தான். நாமும் அந்நிலை பெற எண்ணி இப்பாடலைப் பாடுவோம்.

HAPPY PONGAL

No comments:

Post a Comment